தெலுங்கில் விஜய் தேவர்கொண்ட நடிப்பில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி படம் தென்னிந்திய சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பாலா ‘வர்மா’ என்ற பெயரில் ரீ-மேக் செய்ய விக்ரம் மகன் துருவ் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் முதல் ட்ரைலர் வரை அனைத்தும் வெளியான நிலையில் இந்த படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாக இருந்தது. இந்நிலையில் இந்த படத்தை முதலில் இருந்து எடுக்கப்போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது இந்த படத்தின் உரிமையை பெற்றுள்ள e4 நிறுவனம்.
பாலா இயக்கி முடித்துக் கொடுத்த ‘வர்மா’ படம் தயாரிப்பு தரப்புக்கு திருப்தி அளிக்கவில்லையாம், அதனால் வேறு நடிகர், இயக்குனருடன் படம் மீண்டும் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாலாவுக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ‘வர்மா’ கைவிடப்படிருக்கலாம் என சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தை மீண்டும் இயக்க பிரபல இயக்குனர் கௌதம் மேனனை அணுகி வருகின்றனராம். கௌதம் மேனன் , வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற காதல் படங்களை எடுத்தவர்.
வர்மா படமும் அதே போன்ற கதை அம்சம் என்பதால் இப்படத்தை பாலாவை விட கௌதம் மேனன் நன்றாக எடுப்பார் என்று படக்குழு ஆணித்தனமாக நம்புகிறதாம். அதுமட்டுமில்லை விக்ரம் ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடித்து வருகிறார் என்பதால் விக்ரமும் கௌதம் மேனனை சிபாரிசு செய்கிறார் என்று கூறப்படுகிறது.