நடிகர் விஜய் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ். விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படம் சீனாவில் திரையிடப்பட உள்ளது. அட்லி – விஜய் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போவில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான `மெர்சல்’ திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதே சமயம் படத்தின் ஒரு சில காட்சிகளால் பெரும் சர்ச்சை வெடித்தது.
மத்திய அரசின் ஜி.எஸ்.டி, கோரக்பூர் மரணம், மருத்துவத்துறையின் ஓட்டைகள் உள்ளிட்டவற்றைக் குறித்தும் படத்தில் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இது தமிழக பா.ஜ.க-வினர் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியது. தமிழக பா.ஜ.க-வினர் மெர்சல் திரைப்படத்தை விமர்சித்து வெளியிட்ட கருத்துகளால், மெர்சல் திரைப்படம் தேசியளவில் பிரபலமானது. அந்தப் படத்தில் விஜய் பேசிய அரசியல் வசனங்கள் வைரலானது. இதனால் வசூலிலும் மெர்சல் ஹிட் அடித்தது.
மெர்சலின் வெற்றி இந்தியாவோடு நின்றுவிடவில்லை. சீனாவிலும் தொடரவுள்ளது. ஆம் சீனாவின் HGC என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மெர்சல் திரைப்படத்தின் உரிமத்தைப் பெற்றுள்ளது. மெர்சல் சீன மொழியில் டப் செய்யப்பட்டு விரைவில் சீனாவில் வெளியாக உள்ளது. இதற்கு முன்னர் தங்கல், பஜ்ரங்கி பாய்ஜான், சுல்தான் போன்ற இந்திய படங்கள் சீனாவில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.
மெர்சல் படத்தை சீனாவில் வெளியிடப்போகும் ஹெச்.ஜி.சி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தலைவர் லி யிங், `மெர்சல் உணர்வுபூர்வமான திரைப்படம்’ என்று நெகிழ்ந்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, சீனாவில் வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படம் `மெர்சல்’தான்.