விஷாலின் அரசியல் என்ட்ரி குறித்து அவரது தந்தை அளித்திருக்கும் பேட்டி வைரலாகி வருகிறது. விஜய்யின் புதிய கட்சிக்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும் சினிமா பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். இப்படி ஒரு நிலையில் புரட்சி தளபதி விஷாலும் தனது அரசியல் என்ட்ரி குறித்து அறிவித்து இருந்தார். அதில், “சமூகத்தில் எனக்கு இந்தனை ஆண்டுகளாக ஒரு தடிகனாக, சமூக சேவகனாக உங்களில் ஒருவனாக அந்தஸ்தும் அங்கீகாரமும் அளித்த தமிழக மக்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.

என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே என்னுடைய ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி மன்றமாய் கருதாமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினேன், "இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு" என்ற நோக்கத்தில் நற்பணி இயக்கமாக செயல்படுத்தினோம்.அடுத்த கட்டமாக மக்களின் முன்னேற்றத்திற்காக மக்கள் நல இயக்கத்தை உருவாக்கி மாவட்டம், தொகுதி, கிளை வாரியாக மக்கள் பணி செய்வதுடன், என் தாயார் பெயரில் இயங்கும் 'தேவி அறக்கட்டளை' மூலம் அனைவரும் கல்வி கற்க மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஐயா அப்துல் கலாம் அவர்களின் பெயரில் வருடம்தோறும் பல எண்ணற்ற ஏழை எளிய மாணவ, மாணவியர்களை படிக்க உதவி வருகிறோம் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாய தோழர்களுக்கு உதவிகளை செய்து வருகிறோம்.
அதுமட்டுமின்றி படப்பிடிப்பிற்காக நான் செல்லும் பல இடங்களில் மக்களை சந்தித்து அவர்களின் அடிப்படைத் தேவைகளையும் குறைகளையும் கேட்டறிந்து அவர்களின் கோரிக்கைளையும் என் மக்கள் நல இயக்கம் மூலம் செய்து வருகிறேன்.நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை, "நன்றி மறப்பது நன்றன்று" என்ற வள்ளுவனின் வாக்குப்படி என்னால் முடிந்த உதவிகளை நான் செய்துக்கொண்டே தான் இருப்பேன்.
View this post on Instagram
அது என்னோட கடமை என்று மனரீதியாக நான் கருதுகிறேன்.தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் செய்து வரும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன்.வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்” என கூறியுள்ளார். ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஒரு நிலையில் விஷாலின் அரசியல் அறிவிப்பு குறித்து பேசியுள்ள அவரின் தந்தையும் தயாரிப்பாளருமான ஜி கே ரெட்டி பேசியுள்ளதாவது ’விஷால் சின்ன வயதில் இருந்தே எல்லோருக்கும் உதவி செய்வார், ஏழைகளுக்கு என்றால் கடன் வாங்கியாவது உதவி செய்வார், இப்போது கூட எனது மனைவி தேவியின் பெயரில் அறக்கட்டளை நடத்தி, அதன் மூலம் ஏராளமான மாணவ மாணவிகளுக்கு உதவி செய்து வருகிறார்.

தற்போது ரசிகர் மன்றங்களை அரசியல் இயக்கமாக மாற்றும் பணியில் விஷால் இருக்கிறார், கண்டிப்பாக அரசியலுக்கு வருவார், அரசியலில் ஜெயித்தும் காட்டுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.ஆனால் அதே நேரத்தில் அரசியலுக்கு வரும் முன்பு அவர் விஜய், அஜித், சூர்யா மாதிரி நிறைய சம்பாதிக்க வேண்டும், திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும், சம்பாதித்த பணத்தை பிறகு அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை என்று தெரிவித்தார்.
சிவாஜி, சிரஞ்சீவி உட்பட பலர் அரசியலுக்கு வந்தாலும் சரியான திட்டமிடலுடன் அரசியலுக்கு வரவேண்டும் வந்தால் கண்டிப்பாக வெற்றி பெறலாம் என்பது தான் என் எண்ணம், எனவே விஷால் சரியான நேரத்தில், சரியான திட்டமிடலுடன் அரசியலுக்கு வருவார்' என்று கூறி உள்ளார். ஏற்கனவே விஷாலுக்கு அனிஷா என்பவருடன் நிச்சயம் நடந்து பின்னர் திருமணம் நாடக்கமால் போனது என்பது குறிப்பிடத்தக்கது.






