சிறுநீரக மாற்று அறுவை, கண் பார்வை குறைபாடு போன்ற பல பிரச்சனைகளால் பாகுபலி பட வில்லன் ராணா டகுபதி பாதிக்கப்பட்டிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. டோலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ராணா டகுபதி. இவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டகுபதி சுரேஷ் பாபுவின் மகன் ஆவார். அது மட்டுமில்லாமல் நடிகர் வெங்கடேசனின் சகோதரன் மகன். பழம்பெரும் தயாரிப்பாளர் டகுபதி இராம நாயுடு இவருடைய தாத்தா என்பது குறிப்பிடத்தக்கது.
இதனாலே ராணாவுக்கு சிறு வயதிலிருந்து சினிமாவின் மீது இருந்த அதிக ஈடுபாட்டினால் தற்போது நடிகராக கலக்கிக் கொண்டிருக்கிறார். மேலும், இவர் தெலுங்கு மொழியின் மூலம் தான் சினிமாவில் அறிமுகம் ஆகியிருந்தார். அதற்கு பின்பு இவர் தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த ஆரம்பம் படத்தில் அஜித்தின் நண்பன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதனை தொடர்ந்து இவர் ருத்ரமாதேவி, பெங்களூர் நாட்கள், இஞ்சி இடுப்பழகி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.
ராணா திரைப்பயணம்:
இருந்தாலும் இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்திக் கொடுத்தது ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படம் தான். இந்த படத்தில் ராணா வில்லனாக மிரட்டி இருந்தார். பாகுபலியில் இவரது உடலமைப்பை கண்டு பலரும் வியந்து போனர். மேலும், பாகுபலி படத்தின் மூலம் ராணா உலக அளவில் பிரபலமானார். பாகுபலி படத்திற்கு பின்பு ராணா நடித்திருக்கும் படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.
ராணா அளித்த பேட்டி:
தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பிறமொழி படங்களிலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமில்லாமல் இவர் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய உடலில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள் குறித்து ராணா அளித்து இருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் தன்னுடைய சித்தப்பா வெங்கடேசன் உடன் இணைந்து ராணா நாயுடு என்ற வெப் தொடரில் ராணா நடித்திருந்தார்.
ராணாவிற்கு செய்த அறுவை சிகிச்சை:
இது தொடர்பாக தான் பேட்டி ஒன்றும் ராணா அளித்திருந்தார். அதில் அவர், எனக்கு சிறுவயதில் இருந்தே வலது கண்ணில் பார்வை குறைபாடு இருந்தது. இதனால் எனக்கு கண்களில் கார்னியல் டிரான்ஸ்பிளான்ட் செய்திருக்கிறார்கள். அதேபோல் சில ஆண்டுகளுக்கு முன் எனக்கு திடீரென பிபி அதிகரித்து இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு இருந்தது. இதனால் என் சிறுநீரகம் செயலிழந்து விட்டது.
பாராட்டும் ரசிகர்கள்:
பின் எனக்கு பக்கவாதம் ஏற்பட 70% வாய்ப்பு இருப்பதாகவும், இறந்து போக முப்பது சதவீதம் வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியிருந்தார்கள். இதனை அடுத்து எனக்கு அறுவை சிகிக்சை நடந்தது என்று கூறி இருந்தார். இப்படி ராணா அளித்திருக்கும் பேட்டி பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ராணா உடலில் பல பிரச்சனைகள் இருந்தாலும் மனம் தளராமல் இருப்பதை பார்த்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.