அறிமுக இயக்குனர் ஆர் விஜயகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் அழகிய கண்ணே. இந்த படத்தை எஸ்தெல் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் ஹீரோவாக பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனியின் மகன் லியோ சிவகுமார் நடித்திருக்கிறார். கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்தின் சிறப்பு தோற்றத்தில் இயக்குனர் பிரபு சாலமன், நடிகர் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு என் ஆர் ரகுநாதன் இசை அமைத்திருக்கிறார். இன்று வெளியாகி இருக்கும் அழகிய கண்ணே படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த லியோ சிவகுமாருக்கு சினிமாவில் இயக்குனர் ஆக வேண்டும் என்று ஆசை இருக்கிறது. இதனால் இவர் ஊரில் பல நாடகங்களை நடத்தி வருகிறார். அதிலும் இவரின் புரட்சி நாடகங்கள் சிறப்பாக இருக்கிறது. இதனால் இவர் மீது கதாநாயகி சஞ்சிதா ஷெட்டி காதல் கொள்கிறார். இருந்தாலும் இவர் தன்னுடைய லட்சியத்திற்காக போராடுகிறார். இதனால் இவர் இயக்குனர் பிரபு சாலமனிடம் உதவி இயக்குனராக சேருகிறார்.
இன்னொரு பக்கம் கதாநாயகி சஞ்சிதாவும் வேலை காரணமாக சென்னைக்கு செல்கிறார். ஒரு கட்டத்தில் பல எதிர்ப்புகளை தாண்டி இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்களுக்கு குழந்தையும் பிரிக்கிறது. ஆனால், லியோ இயக்குனர் ஆக வேண்டும் என்பதால் தன்னுடைய குடும்பத்தை பார்த்துக் கொள்ள முடியாமல் போகிறது. இறுதியில் லியோ தன்னுடைய லட்சியப்படி இயக்குனர் ஆனாரா? சஞ்சிதாவின் ஆசையையும் குடும்ப பொறுப்பையும் நிறைவேற்றினாரா? என்பதே படத்தின் மீதி கதை.
இந்த படத்தின் மூலம் லியோ சிவகுமார் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். சஞ்சிதா, சுஜாதா ஆகியோரும் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். ஆனால், லியோ சிவகுமாருக்கு இன்னும் நடிப்பு பயிற்சி தேவை என்று தான் சொல்லணும். பிரபு சாலமனின் நடிப்பு நன்றாக இருக்கிறது. மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த கதாபாத்திரமும் இல்லை.
ஒரே ஒரு காட்சியில் மட்டும் தான் விஜய் சேதுபதி வந்திருக்கிறார். படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சுவாரசியமும் சஸ்பென்சும் இல்லை. அரைத்த மாவையே இயக்குனர் மீண்டும் மீண்டும் அரைத்து வைத்திருக்கிறார். ஆனால், இன்றைய காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பு முறையை பற்றி இயக்குனர் சொல்லியிருப்பது சிறப்பு. அதேபோல் படம் ஆரம்பத்திலிருந்து முடியும்வரை யூகிக்கக்கூடிய காட்சிகளாகவே இருக்கிறது. வில்லனுடைய கதாபாத்திரம் ரசிகர்களை ஈர்க்கவில்லை. பின்னணி இசை சுமாராகத்தான் இருக்கிறது. படம் ரொம்ப ரொம்ப மொக்கையாக தான் இருக்கிறது
நிறை:
பிரபு சாலமனின் நடிப்பு சிறப்பு
குழந்தைகளின் வளர்ப்பு முறை
எதார்த்தமான குடும்ப கதை
மற்றபடி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒன்றும் இல்லை
குறை :
நடிகர்கள் தேர்வு சிறப்பாக இருந்திருக்கலாம்
இயக்குனர் கதைக்களத்தில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்
ஆங்காங்கே நிறைய லாஜிக் குறைபாடுகள்
பின்னணி இசையும் ஒளிப்பதிவு படத்திற்கு செட் ஆகவில்லை
மொத்தத்தில் அழகிய கண்ணே-குறிக்கோளை தவறவிட்டது