தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ரேணுகா மேனனும் ஒருவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து இருந்தார். தமிழில் கலாபக்காதலன், தாஸ், பிப்ரவரி 14 போன்ற படங்களில் நடித்து இருந்தார். நடிகை ரேணுகா அவர்கள் 2006 ஆம் ஆண்டு சாப்ட்வேர் இன்ஜினியர் சூரஜ்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திரை உலகில் வேகமாக வளர்ந்து கொண்டிருந்த போது நடிகை ரேணுகா மேனன் அவர்கள் திடீரென்று திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர் நடிப்பதை விட்டு விட்டார். பின் இவர் கலிபோர்னியாவிலேயே செட்டிலாகி விட்டார்.
தற்போது நடிகை ரேணுகா அங்கேயே நடனப்பள்ளி ஒன்றை நிறுவி வருகிறார். இவர்களுக்கு தற்போது இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 13 வருடங்களாக நடிகை ரேணுகா மேனன் அவர்கள் கலிபோர்னியாவில் தான் வசித்து வருகிறார். நடிகை ரேணுகாவிடம் சினிமாவில் இருந்த காலகட்டங்களை குறித்து பேசிய போது அவர் கூறியது, நான் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போதே எங்களுடைய குடும்ப நண்பர் தயாரித்த மாயாமோகித சந்திரன் என்ற மலையாள படத்தில் நடித்தேன். ஆனால், அந்த படம் வெளிவரவில்லை. அதன் பிறகு டைரக்டர் கமலின் ‘நம்மள்’ என்ற படத்தின் மூலம் தான் நான் சினிமா உலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானேன்.
இதையும் பாருங்க : போஸ்டரை பாத்துட்டு விஜய் சார் ஒரே ஒரு கேள்வி கேட்டார். மாஸ்டர் போஸ்டர் டிசைனர் சொன்ன தகவல்.
இந்த படத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று நான் நினைத்தேன். ஆனால், நம்மில் படம் முடிந்தவுடன் எனக்கு தெலுங்கு பட வாய்ப்புகள் வந்தது. அப்படியே தமிழ்,மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தேன். எனக்கு எப்போதும் சினிமாவில் மிகுந்த ஆர்வம் கிடையாது. என்னுடைய ஆசையே வெளிநாட்டிற்கு சென்று உயர்கல்வி கற்க வேண்டும் என்பது தான். ஆனால், அதற்கு முன்னாடியே என் பெற்றோர்கள் எனக்கு திருமண ஏற்பாடுகளை செய்தார்கள். முதலில் பார்த்த சம்பந்தமே அவர்களுக்கு பிடித்து போய் விட்டதால் எனக்கு உடனடியாக திருமணத்தை செய்து வைத்தார்கள்.
என்னுடைய கணவர் சூரஜ் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். திருமணம் முடிந்தவுடன் நாங்கள் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் செட்டிலாகிவிட்டோம். சினிமா மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த பாதிரியார் டோமினிக் அவர்கள் என்னிடம் நடிப்பு, நடனம் பற்றி நிறைய விசாரித்தார். பின் அந்த பகுதியில் உள்ள சிறுமிகளுக்கு நடனம் கற்றுத் தர முடியுமா? என்று கேட்டார். இது கடவுள் தருகின்ற வாய்ப்பு என்று நினைத்து நான் அதை பயன்படுத்தி கொண்டேன். தேவாலயத்தில் நான் நடன பயிற்சி வழங்குவதற்கு இடம் ஒதுக்கித் தந்தார்கள். நானும் நாட்டிய ஆசிரியையாக மாறி விட்டேன். குழந்தைகள் நிறைய வர தொடங்கியது. அதனால் அருகிலேயே இன்னொரு இடத்தில் பயிற்சி மையத்தை உருவாக்கி சினிமா நடனம், பாரம்பரிய நடனம் என இரண்டையும் கற்றுக்கொடுத்து வருகிறேன்.
வீட்டு வேலைகளும், குடும்ப நிர்வாகத்தையும் நானே கவனித்துக் கொள்கிறேன். எனது கணவர் வேலையில் ரொம்ப பிஸியாக இருப்பார். என்னிடம் நிறைய பேர் படத்தில் மீண்டும் நடிப்பீர்களா? என்று கேட்டார்கள். உண்மையை சொல்லப்போனால் நான் நடிக்க வர மாட்டேன். தமிழில் இருந்தும் எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. டெலிவிஷன் நிகழ்ச்சி நடத்த, தொகுத்து வழங்க என பல வாய்ப்புகள் வந்தன. அவை எதையும் நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால் நான் ஒரு சராசரி நடிகை. எனக்கு சினிமாவில் மிகுந்த ஈடுபாடோ, எதிர்பார்ப்போ எதுவும் இல்லை. இந்த வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறினார்.