என்னுடைய படத்தை என் மகன் பார்ப்பதில்லை என்று பூர்ணிமா பாக்கியராஜ் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் பூர்ணிமா பாக்கியராஜ். இவர் 70, 80 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
இவருடைய கணவர் தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் தான்.
இவர் பாக்கியராஜ் உடன் சேர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் படங்களில் நடித்ததன் மூலம் தான் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது என்று சொல்லலாம். பின் கடந்த 1984 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு சாந்தனு மற்றும் சரண்யா என்று இரு பிள்ளைகள் இருக்கிறார்கள். இவர் மகன் சாந்தனு தமிழ் சினிமா உலகில் நடிகராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.
பூர்ணிமா பாக்யராஜ் திரைப்பயணம்:
திருமணத்திற்கு பிறகு பூர்ணிமா பாக்யராஜ் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டார். பின் ‘ஆதலால் காதல் செய்வீர்’ என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதை தொடர்ந்து பூர்ணிமா படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதோடு சின்னத்திரை சீரியல்களிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று வருகிறார். தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகியிருந்த ருத்ரன் படத்தில் பூர்ணிமா பாக்யராஜ் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது.
பூர்ணிமா பாக்யராஜ் அளித்த பேட்டி:
மேலும், இவர் நடிகை மட்டும் இல்லாமல் ஃபேஷன் டிசைனர் ஆகவும் இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் பூர்ணிமா பாக்யராஜ் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் தன்னுடைய மகன் குறித்து கூறியது, என்னுடைய மகனுக்கு என் மீது அதிக பாசம் இருக்கிறது. நான் நடிக்கும் பல திரைப்படங்களில் கடைசியில் இறந்து போய் விடுவது அல்லது ஏதாவது பிரச்சனையில் இருப்பது போல் வருவதால் நான் நடித்த திரைப்படத்தை அவன் பார்க்கவே மாட்டான்.
சாந்தனு குறித்து சொன்னது:
சமீபத்தில் நான் நடித்த ருத்ரன் திரைப்படத்தில் கூட நான் இறப்பது போன்று இருக்கும். அது என்னுடைய மகனுக்கு ரொம்ப வருத்தத்தை அளித்தது. என்னுடைய மகனுக்கு நிறைய திறமைகள் இருக்கிறது. ஆனால், அவனுக்கான சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதை நினைத்து நான் பல நேரங்களில் புலம்பி இருக்கிறேன். நான் அடிக்கடி அவனுக்கு ஆறுதலாக பல அறிவுரைகளையும் சொல்வேன்.
எல்லாம் கடந்து போகும், எல்லாம் மாறும் ஒருநாள், நம்முடைய திறமைக்கு சரியான வாய்ப்பு கிடைக்கும் என்று கூறுவேன். சக்கரக்கட்டி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதற்கு பிறகு என் மகன் நடிப்பில் வெளிவந்த படங்கள் எதுவும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. ஒரு அம்மாவாக எனக்கு நிறைய வருத்தம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இப்படி பூர்ணிமா பாக்யராஜ் பேசி இருக்கும் வீடியோ வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.