தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்பவர் சாந்தனு. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சாந்தனு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் இராவணக் கோட்டம். இந்த படத்தை இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கியிருக்கிறார். மதயானை கூட்டம் படத்துக்கு பிறகு விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ராவண கோட்டம். இந்த படத்தில் சாந்தனு பாக்யராஜ், பிரபு, இளவரசு, கயல் ஆனந்தி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் ராமநாதபுரம் மாவட்டம் ஏனாதியை சுற்றியுள்ள சிறு சிறு கிராமப் பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடி இருக்கிறது. அதோடு அங்கு உள்ள மேலத் தெரு, கீழத் தெருவில் வசிக்கும் வேறு வேறு ஜாதி மக்களும் ஒன்னுக்குள் ஒன்றாக பங்காளிகளாக பழகி வருகின்றனர். இவர்களின் இரு சமூகத்து தலைவர்களான பிரபுவும், இளவரசும் நட்புக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு மத்தியில் கார்ப்பரேட் கம்பெனி ஒன்று கிராமத்தில் இருக்கும் இயற்கை வளத்தை சுரண்ட வருகிறது.
இதில் அரசியல்வாதிகளும் ஆதாயம் பார்க்கிறார்கள். இரு சமூகத்துக்கும் இடையில் கலவரத்தை ஏற்படுத்தி தங்களுடைய கார்ப்பரேட் கம்பெனியை நிலைநாட்ட நினைக்கிறார்கள். இதற்கிடையில் சாந்தனு- ஆனந்தி காதல் பகடைக்காயாய் மாறுகிறது. தண்ணீர் பஞ்சத்தின் மூல வேர் ஆன சீமை கருவேல மரக்கட்டின் ஆபத்து குறித்து கண்டறிந்து பிரபுவும் இளவரசும் செயல்படுகிறார்கள். ஆனால், இருவரையும் கொல்கிறார்கள். இதனை தொடர்ந்து நடப்பதென்ன? இரு கிராமத்து மக்களிடையில் கலவரம் வெடித்ததா? கார்ப்பரேட் கம்பெனி நிறுவனம் தொடங்கப்பட்டதா? சாந்தனு-ஆனந்தியின் காதல் என்னானது? என்பதே படத்தின் மீதி கதை.
இந்த படம் 1957 ஆம் ஆண்டு நிகழ்ந்த முதுகளத்தூர் கலவரத்தின் பின்னணி, ஜாதிய பிரச்சனை, முக்கோண காதல் கதை என அனைத்தையும் சொல்லும் படமாக இருக்கிறது. படத்தில் கிராமத்து இளைஞனாக சாந்தனுவின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. காதல் காட்சிகள், ஆக்ரோஷமாக கபடி விளையாடுவது, அழுகை, சந்தோசம் என அனைத்து காட்சிகளிலும் சாந்தனு தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர்களை தொடர்ந்து வரும் பிரபுவும், இளவரசும் தங்களுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
பரியேறும் பெருமாள் படத்தில் வந்தது போல இரு சமூகத்து பிரச்சனை, தன்னைச் சுற்றி நடக்கும் சிக்கல்கள் என எதுவும்’புரியாமல் வெள்ளந்தி பெண்ணாக கயல் ஆனந்தி நடித்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் நடிப்பில் கவனம் செலுத்தி இருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து கை இழந்த வில்லனாக வரும் நடிகர் படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறார். முதல் பாதி பார்வையாளர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டாம் பாதி தான் வேகமாக செல்கிறது.
அரசியல் ஆதாயத்துக்காக இரு பிரிவினர் மத்தியில் ஏற்படும் கலவரங்கள், அரசியல் காட்சிகள் என சில காட்சிகள் பார்வையாளர்களை விறுவிறுப்பாக பார்க்க வைத்திருக்கிறது. இயக்குனர் கதைக்களத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். மொத்தத்தில் ராவண கோட்டம் படம் ரொம்ப சுமாரான படமாக இருக்கிறது.
நிறை:
சாந்தனு நடிப்பு சிறப்பு
ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலம்
பிரபு இளவரசன் நடிப்பு பாராட்டக் கூடிய ஒன்று
ஜாதி கலவரம், அரசியல் சூழ்ச்சி பின்னணி கொண்ட கதை
குறை:
முதல் பாதி பார்வையாளர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது
இயக்குனர் கதைக்களத்தில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
மொத்தத்தில் ராவண கோட்டம்- இலக்கை தவறவிட்டது