அஞ்சலி தேவிக்காக இலவசமாக தெலுங்கு படத்தில் நடிகர் சிவாஜிகணேசன் நடித்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் அஞ்சலிதேவி. இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் உச்ச நடிகையாக இருந்தார். அவருடைய தெலுங்கு படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
பின் அவர் நேரடியாக மகாத்மா உதங்கர், மங்கையர்க்கரசி, மாயாவதி போன்ற தமிழ் படங்களில் நடித்து இருந்தார். நடிகை அஞ்சலிதேவி சினிமாவில் பிரபலமாவதற்கு முன்பே இசையமைப்பாளரும், நடன இயக்குனருமான ஆதிநாராயணராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் இவர் அஞ்சலி பிலிம்ஸ் நிறுவனத்தை தொடங்கி படங்களையும் தயாரித்து வெளியிட்டு இருந்தார். பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம், எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினிகணேசன், என்டி.ராமராவ், நாகேஸ்வரராவ் என அன்றைய முன்னணி தென்னிந்திய நடிகர்கள் அனைவருடனும் சேர்ந்து இவர் நடித்தார்.
பக்த துக்காராம் படம்:
மேலும், 1973 ல் அஞ்சலிதேவி தனது அஞ்சலி பிக்சர்ஸ் சார்பில் பக்த துக்காராம் என்ற படத்தை தெலுங்கில் தயாரித்து நடித்தார். இதில் அஞ்சலிதேவி நாயகியாகவும், அக்னியேனி நாகேஸ்வரராவ் நாயகனாகவும் நடித்தனர். இவர் நடிகர் நாகார்ஜுனின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. மதுசூதனன் ராவ் இந்த படத்தை இயக்கி இருந்தார். அஞ்சலிதேவியின் கணவர் ஆதிநாராயணராவ் இந்த படத்திற்கு இசையமைத்தார். பக்த துக்காராம் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த துக்காராமைப் பற்றிய கதை.
சிவாஜி நடித்த படம்:
அவர் பாண்டுரங்கனின் சிறந்த பக்தர். இந்தப் படத்தில் வீரசிவாஜியாக சிவாஜி கணேசன் நடித்தார். இந்நிலையில் இதற்காக அவர் சம்பளம் எதுவும் வாங்கவில்லை. தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்குவதற்கான செலவையும் சிவாஜியே ஏற்றுக் கொண்டாராம். சிவாஜி கணேசன் அறிமுகமானது பராசக்தி படத்தில் என்றாலும் அப்படம் வரும் முன்பே பூங்கொதை படத்தில் நடிக்க அஞ்சலிதேவி பிக்சர்ஸ் சார்பில் சிவாஜிக்கு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டிருந்தது.
அஞ்சலி பிக்சர்ஸ் பொருளாதார நெருக்கடி:
பூங்கோதை திரைப்படம் தமிழில் பூங்கோதை என்றும், தெலுங்கில் பரதேசி என்றும் ஒரே நேரத்தில் இரு மொழிகளில் தயாரானதால் வெளியாக தாமதமானது. இதில் நாகேஸ்வரராவும், அஞ்சலிதேவியும் பிரதான வேடங்களில் நடித்து இருந்தார்கள். ஆனந்த் என்ற வேடத்தில் சிவாஜி நடித்தார். இதற்கும் அஞ்சலிதேவியின் கணவர் ஆதிநாராயணராவே இசையமைத்தார். 70களின் முற்பகுதியில் அஞ்சலி பிக்சர்ஸ் பொருளாதார நெருக்கடியில் இருக்கையில் சிவாஜியிடம் பக்த துக்காராம் படத்தில் வீரசிவாஜியாக நடிக்க அணுகி இருந்தார்கள்.
சம்பளம் வாங்காமல் நடித்த சிவாஜி:
பராசக்தி வரும் முன்பே பூங்கோதை படத்துக்கு முன்பணம் தந்தவர் அஞ்சலி தேவி என்ற நன்றிக்கடனில் பக்த துக்காராம் படத்தில் பணம் வாங்காமல் இலவசமாக நடித்துக் கொடுத்ததுடன் படப்பிடிப்பு செலவையும் சிவாஜி ஏற்றுக் கொண்டார். இந்த படம் வெளியாகி 100 நாள்களை கடந்து ஓடி வெற்றி பெற்றது. இதேபோல் நட்புக்காக, நன்றிக்கடனுக்காக, கருணைக்காக பல படங்களில் சம்பளம் வாங்காமல் நடிகர் திலகம் சிவாஜி நடித்து பலருக்கு முன்னோடியாக இருந்துள்ளார்.