தமிழகத்தில் ஏற்பட்ட ‘கஜா’ புயல் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன. புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.
மக்கள் அனைவரும் நிவாரண முகாம்களின் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. வீடுகளை இழந்து தவித்து வரும் மக்களுக்கு, தமிழக அரசு ஒருபுறம் நிவாரணம் வழங்கிவந்தாலும், தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்கள் முன்வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாகச் சென்று உதவிகள் வழங்கிவருகின்றனர்.
அந்த வகையில் திரைப் பிரபலங்களும் டெல்டா மாவட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.அதில் நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் இணைந்து மொத்தம் 50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளனர்.
நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் சென்னையிலிருந்து லாரிகளில் பல லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி ரூபாய் 25 லட்சம் மதிப்பிலான உடனடி நிவாரணப் பொருள்கள் வழங்கியுள்ளார். நடிகர் கருணாகரன் பல நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார்.இதே போல பல்வேறு நடிகர்களும் நிவாரண நிதிகளை வழங்கி வருகின்றனர்.