கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியை கட்டாய படமாக படிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. தேசிய கல்வி கொள்கையில், நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை அமல்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டது.பல மாநிலங்கள் இந்த கொள்கையை ஏற்ற நிலையில், இந்த கொள்கை இந்தியை திணிக்கும் முயற்சி என தமிழகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழகத்தில் தற்போது மீண்டும் இந்தி எதிர்ப்பு அரசியல் தலை தூக்க துவங்கி உள்ளது.
சமீபத்தில் கூட தமிழ்நாடு இரு மொழிக் கொள்கையை மட்டுமே பின்பற்றும் என்றும் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையில் அறிவித்துள்ள மும்மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் ட்விட்டரில் கூட #இந்தி தெரியாது போடா என்ற ஹேஷ் டேக் கூட கடந்த சில நாட்களுக்கு முன் ட்ரெண்டிங்கில் வந்தது.
அது போக பல்வேறு பிரபலங்கள் கூட இந்தி தெரியாது போடா என்ற வாசகம் அடங்கிய டி-ஷர்ட்டை அணிந்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தனக்கு இந்தி பேசத் தெரியாது என்று பிரபல இசையமைப்பாளரான ஏ ஆர் ரஹ்மான் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் தொகுப்பாளர், ஏ ஆர் ரஹ்மானிடம் ‘எத்தனை மொழி நீங்கள் பேசுவீர்கள்’ என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் ஏ ஆர் ரஹ்மான் ‘ நான் வ்ந்த மொழியையும் சரியாக பேச மாட்டேன். கொஞ்சம் இங்கிலிஷ், கொஞ்சம் தமிழ், கொஞ்சம் தெலுங்கு பேசுவேன். இந்தியில் பாடுவேன். ஆனால், பேசத் தெரியாது’ என்று கூறியுள்ளார்.