தமிழில் 1999-ஆம் ஆண்டு வெளியான படம் ‘கள்ளழகர்’. இந்த படத்தில் ஹீரோவாக ‘புரட்சி கலைஞர்’ விஜயகாந்த் நடித்திருந்தார். இப்படத்தினை இயக்குநர் பாரதி இயக்கியிருந்தார். இதில் முக்கிய வேடத்தில் நடிகர் சோனு சூட் நடித்திருந்தார். அவர் அறிமுகமான முதல் தமிழ் திரைப்படம் இதுதானாம். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சோனு சூட் ‘தளபதி’ விஜய்யின் ‘நெஞ்சினிலே’, ‘நவரச நாயகன்’ கார்த்திக்கின் ‘சந்தித்த வேளை’, ‘டாப் ஸ்டார்’ பிரஷாந்தின் ‘மஜ்னு, சாகசம்’, ‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித்தின் ‘ராஜா’, நடிகை சிம்ரனின் ‘கோவில்பட்டி வீரலட்சுமி’, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘சந்திரமுகி’, ‘யங் சூப்பர் ஸ்டார்’ சிம்புவின் ‘ஒஸ்தி’, ‘கிங் ஆஃப் டான்ஸ்’ பிரபு தேவாவின் ‘தேவி’ என அடுத்தடுத்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.
இதில் ‘சந்திரமுகி, ஒஸ்தி’ மற்றும் ‘தேவி’ ஆகிய மூன்று படங்கள் மூலம் நடிகர் சோனு சூட் அதிக கவனம் பெற்றார். ‘சந்திரமுகி’ படத்தை பிரபல இயக்குநர் பி.வாசு இயக்கியிருந்தார். இந்த படத்தில் சோனு சூட்டிற்கு சிறய வேடம் தான். ஆனால், அது நெகட்டிவ் கேரக்டர் என்பதாலும், ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் சோனு சூட் மோதுவது போல் சண்டைக் காட்சி இருந்ததாலும் அவரின் முகம் அனைவரின் மனதிலும் பதிந்தது.
‘ஒஸ்தி’ படத்தை பிரபல இயக்குநர் தரணி இயக்கியிருந்தார். இந்த படத்தில் சோனு சூட் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் அசத்தியிருந்தார். ‘தேவி’ படத்தை பிரபல இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார். இதில் கதையின் மிக முக்கிய வேடத்தில் சோனு சூட் நடித்திருந்தார்.
நடிகர் சோனு சூட் தமிழ் மட்டுமின்றி, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், மாண்டரின் ஆகிய மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான படம் ‘சீதா’ (தெலுங்கு).தற்போது, சோனு சூட் கைவசம் ஹிந்தியில் அக்ஷய் குமாரின் ‘ப்ரித்விராஜ்’ மற்றும் தமிழில் விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’ என இரண்டு படங்கள் உள்ளது. இதில் ‘ப்ரித்விராஜ்’ படத்தை சந்திரபிரகாஷ் த்விவேதி இயக்குகிறார் மற்றும் ‘தமிழரசன்’ படத்தை பாபு யோகேஷ்வரன் இயக்குகிறார்.
தற்போது, ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருவதால், ‘144’ போடப்பட்டுள்ளது. திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் சோனு சூட் மும்பையில் இருக்கும் அவரது 6 மாடி கொண்ட ஹோட்டலை, ‘கொரோனா’ வைரஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ஓய்வு எடுக்க பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்திருக்கிறார்.