தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்த மேக்னா ராஜ்ஜின் கணவரும், கன்னட நடிகருமான சிரஞ்சீவி சர்ஜா அவர்கள் திடீரென்று மரணம் அடைந்துள்ளார். இந்த தகவல் கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகை மேக்னா ராஜ் மற்றும் கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜா இருவரும் 2018-ம் ஆண்டு மே 2-ம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டார்கள். நேற்று (ஜூன் 6) சிரஞ்சீவி சர்ஜா தனது குடும்பத்தினருடன் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த பொழுது திடீரென்று நெஞ்சுவலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது.
பின் உடனடியாக இவரை ஜெயநகரில் உள்ள சாகர் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சர்ஜாவை காப்பாற்ற முடியவில்லை. நடிகர் சிரஞ்சீவி சர்ஜா அநியாயமாக மரணம் அடைந்தார். தற்போது இவருக்கு 39 வயது தான் ஆகிறது. இவரின் இறுதிச் சடங்கு இன்று கனகபுராவில் இருக்கும் பண்ணை வீட்டில் நடைபெறுகிறது. அவரின் உடலை பண்ணை வீட்டு தோட்டத்தில் புதைத்தால் சிரஞ்சீவி எப்பொழுதும் தங்களுடனேயே இருப்பது போன்று இருக்கும் என்பதால் குடும்பத்தார் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறார்களாம்.
சிரஞ்சீவி சார்ஜாவின் மரண செய்தி அறிந்ததும் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் என்று பலரும் தங்கள் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்தார்கள். இந்நிலையில் பிரபல நாவல் ஆசிரியையான ஷோபா டேயும் ட்வீட் செய்தார். அதில் அவர் கூறி இருப்பது, ஒரு ஸ்டார் நம்மை விட்டு போய்விட்டார். என்ன ஒரு இழப்பு. அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி இருந்தார்.
பின் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஷோபா. ஷோபா டே வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த தெலுங்கு சினிமா ரசிகர்கள் மிகவும் கோபம் அடைந்துள்ளனர். யார் இறந்தார் என்று கூட தெரியாமல் டீவ்ட் போடுவதா?? உயிருடன் இருக்கும் நபரை இறந்துவிட்டார் என்று எப்படி நீங்கள் ட்வீட் செய்யலாம் என்று தாறு மாறாக விளாசி உள்ளார்கள். பலரும் கலாய்த்ததை பார்த்து ஷோபா டே அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார்.