கருப்புப் பொட்டு, வேஷ்டி சட்டை என கெட்டப்பில் கிராமத்தானாக மாறிவிட்டாலும், நடிப்பில் பாபி சிம்ஹா அத்தனை பொருத்தமாக இல்லை. கிட்டத்தட்ட இதே கதாபாத்திரத்தின் வேறு வெர்ஷனை இன்னும் நல்ல பெர்ஃபாமென்ஸில் `இறைவி' படத்தில் பார்த்துவிட்டதாலோ? க்ளைமாக்ஸில் கழுத்து வரை காதலைத் தேக்கி வைத்து ஹீரோயினைப் பார்த்து ரொமான்டிக்காகக் கண்ணடிப்பதைத் தவிர அவருக்கான வேலை பெரிதாக ஒன்றுமில்லை.
தன்யா நடிப்பு எந்த அலட்டலும் இல்லாமல் இயல்பாக இருக்கிறது. லட்சுமி மேனனை எதிர்த்து தேனி ஏரியாவில் போட்டியிட்டால் அம்மணிக்கு டெபாசிட் நிச்சயம் கிடைத்துவிடும். `தேசிங்கு ராஜா'வில் கேட்ட பாயாசம் இந்தப் படத்தில்தான் சிங்கம்புலிக்குக் கிடைக்கிறது. அதேபோல் சில இடங்களில் அவரது காமெடியும் ஒர்க் அவுட் ஆகிறது. அதைவிட கண்கலங்கும் காட்சியில்தான் மெர்சல் காட்டுகிறார். பசுபதிக்கு சாதாரணமான ஒரு ரோல், அதை மிக சாதாரணமாக நடித்துவிட்டுப் போகிறார். "அவன அரத்துப் போடுங்கடா, ஆரையும் ஒயரோட விடாதீங்கடா" என தமிழா, தெலுங்கா, கன்னடமா எனப் புரியாத மாதிரி டப்பிங் பேசியபடி சரத் லோகித் வந்து போகிறார். தமிழை வெட்ருங்க சார்.
பஞ்சாயத்தில் பத்து நாளில் பேசிக்கலாம் என்கிறார்கள். ஆனால், அதன்பின் ஒரு போகம் விவசாயமே செய்துவிடுகிறார் ஹீரோ. ஆனால், பாபி சிம்ஹாவும் பஞ்சாயத்தும் ஒன்றுமே செய்யாமலா இருப்பார்கள்? சரத் லோகித்துக்கு பசுபதியிடம் ஒரு வேலை நடக்க வேண்டுமே. அது என்ன வேலை? அது என்ன ஆனது? அந்த அம்மா கேரக்டர் படத்துக்கு எதற்கு? அந்த ஊரில் யார் வீடுமே சரியாக கட்டப்படவில்லையா? சுவர்கள் இடிந்து விழுந்துகொண்டிருக்கின்றன.
கதையே பழசு; ட்யூன் மட்டும் புதுசு வேணுமா என்ற இசையமைப்பாளர் இமானின் கோபம் பாடல்களில் தெரிகிறது. ஆனாலும், மெலடிகள் இதம்தான். கிராமத்து லொகேஷன்களில் முடிந்த அளவு எதாவது புதுமையாகக் காட்டிவிட முயற்சி செய்கிறது சக்திவேலின் ஒளிப்பதிவு. இத்தனை சுமார்களுக்கும் நடுவில் சுழற்றியடித்திருக்கிறார் சண்டைப் பயிற்சியாளர் ராஜசேகர். குறிப்பாக க்ளைமாக்ஸுக்கு முந்தைய சண்டைக்காட்சி அருமை.
மொத்தத்தில், இந்தக் கருப்பன்.க்ளிஷேக்களின் தலைவன்!




